Tuesday 18 August 2015

ஸ்லோகங்கள்


Wednesday, October 16, 2013

வார்த்தைகளும் வேற்றுமை உருபுகளும் -1



வார்த்தைகளும் வேற்றுமை உருபுகளும் -1


வார்த்தைகளுடன் வேற்றுமை உருபுகள் சேரும் போது அந்த வார்த்தைகள் எவ்வாறு மாறுகின்றன என்பது ஸம்ஸ்க்ருதம் கற்பவர் அறியவேண்டியவற்றில் மிகவும் முக்கியமானது. தமிழிலும் இது உண்டு. உதாரணத்துக்கு,

1.ராமன்
2.ராமனை
3.ராமனால், ராமனுடன், ராமனோடு
4.ராமனுக்கு
5.ராமனிடமிருந்து
6.ராமனுடைய
7.ராமன் மேல்
8.ஏ ராமா!

இதே போல் பிரதிப்பெயர்ச்சொற்களுக்கும் மாற்றங்கள் வருகின்றன.

நான்
என்னை
என்னால், என்னுடன், என்னோடு
எனக்கு
என்னிடமிருந்து
என்னுடைய
என் மேல்
..........

ஆனால், சம்ஸ்க்ருதத்தில் ஒரு சொல் எந்த உயிர் எழுத்தில் முடிகிறது என்பதைப் பொருத்து இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலும் சம்ஸ்க்ருதத்தில் ஒருமை, பன்மை மட்டும் அன்றி, இருமை என்று ஒன்று உண்டு. இது அவ்வளவாக உபயோகப்படாவிட்டாலும், சில இடங்களில் வரும். (உ-ம்) ராம லக்ஷ்மணர்கள் என்பதற்கு 'राम लक्ष्मणौ' என்று வரும் .இறைவனின் இரு பாதங்களுக்கு 'पादौ' என்று வரும். நாம் இப்போது ஒருமை, பன்மைகளை மட்டும் பார்க்கலாம்.


अकारान्त: पुल्लिन्ग: - 'राम' शब्द:

'அ' வில் முடியும் ஆண்பால் சொல்- 'ராம'


ஒருமை                             பன்மை

राम:     ராமன்                       रामा: ராமர்கள்
रामम्    ராமனை                     रामान् ராமர்களை
रामेण    ராமனால், ராமனுடன்,         रामै:  ராமர்களால், ராமர்களுடன்,
रामाय    ராமனுக்கு                   रामेभ्य:   ராமர்களுக்கு
रामात्    ராமனிடமிருந்து              रामेभ्य:   ராமர்களிடமிருந்து
रामस्य    ராமனுடைய                 रामाणाम्  ராமர்களுடைய
रामे      ராமன் மேல்                 रामेषु    ராமர்களின் மேல்
राम्      ஏ ராமா!                     रामा:    ஏ ராமர்களே!







இவற்றை மட்டும் படித்து விட்டால், நிறைய வார்த்தைகளுக்கு பொருள் புரிந்து விடும். 'அ' வில் முடியும் பெரும்பாலான ஆண்பால் சொற்கள் இதே போல் தான் மாறும்.



Monday, October 14, 2013

ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள சில முக்கியமான வார்த்தைகள்



நான் முன்பே தெரிவித்துள்ளது போல, என்னுடைய ஸ்ம்ஸ்க்ருத அறிவு மிகவும் குறைவு. அதனால் தான், நான் திடீர் திடீரென்று, சில வார்த்தைகளின் உட்பொருளைப்ப்புரிந்து கொள்ளும் போது அந்த ஆனந்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த விஷயங்கள் உங்களில் சிலருக்கோ, பலருக்கோ, ஏற்கனவே தெரிந்திருக்கலாம்.

என் அனுபவத்தில், ஸ்லோகங்களைப்புரிந்து கொள்ள ஒரளவு வார்த்தைகளும், கொஞ்சம் வேற்றுமை உருபுகள் பற்றிய அறிவும் இருந்தால் போதும். முழுமையாக அல்ல. அவற்றின் முக்கிய செய்திகளைப்புரிந்து கொள்ள.

உதாரணத்துக்கு சில வார்த்தைகள்:

1. मामव- மாமவ -என்னைக்காப்பாற்று.

माम- மாம்- என்னை

अव- அவ- காப்பாற்று.

எத்தனை பாடல்களிலும் ஸ்லோகங்களிலும் இந்த வார்த்தைகள் உபயோகப்பட்டுள்ளன!

'மாதவ மாமவ தேவா!'
'மாமவ பட்டாபி ராமா!'
'மாமவ மீனாக்ஷி'
'மாமவ ரகுவீரா..'

சில கீர்த்தனைகளில், 'அவாவா' என்று வரும். அதாவது 'அவ'+'அவ'  'காப்பாற்று'
'காப்பாற்று' என்று இரண்டு முறை சொல்லப்பட்டிருக்கும்.


2. 'मम' -மம - என்னுடைய

அந்தணர்கள் செய்யும் சடங்குகளில் இந்த வார்த்தை திரும்பத்திரும்ப வரும். சம்ஸ்க்ருதம் தெரியாமல் புரோகிதர் சொல்வதை மட்டும்  திரும்பச்சொல்பவர்கள் இந்த வார்த்தையை அடிக்கடி சொல்ல வேண்டி வரும். பித்ருக்களுக்கு செய்யும் ஸ்ரார்த்தத்திலும், தானம் கொடுக்கும் போதும், 'ந மம' 'ந மம' என்று சொல்லுங்கள்' என்று புரோகிதர் சொல்லுவார். 'ந' 'न' என்றால் இல்லை என்று பொருள். ஒரு முறைக்கு
இருமுறையாக இது என்னுடையது இல்லை. உங்களுக்குக்கொடுத்து விட்டேன்' என்று சொல்லச்சொல்லுவார்.

3. 'अस्माकम' - 'அஸ்மாகம்' -எங்களுடைய

இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்யும் சடங்குகளில், இந்த வார்த்தை வரும்.

திருமணம் ஆகட்டும், ஈமச்சடங்குகள் ஆகட்டும், அவற்றில் கூறப்படும் மந்திரங்கள் எவ்வளவு பொருள் பொதிந்தவை, மனதை உருக்குபவை, எண்ணங்களையே மாற்றக்கூடிய சக்தி உள்ளவை என்பதை நினைத்தால், எப்படிப்பட்ட ஒரு பொக்கிஷத்தை நாம் தவற விட்டு விட்டோம் என்று வருத்தமாக இருக்கிறது. இப்பவும் கூட நேரம் இருக்கிறது. அவர் அவர் இருக்கும் இடத்தில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்கலாம். என்னால் முடிந்ததை நான் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய பகிர்வுகள் மேலும் கற்க ஒரு  தூண்டு கோலாகப்பயன் பட்டால் கூட எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


அயி கி3ரி-நந்தி3னி!

மிகவும் பிரபலமான மஹிஷாசுர மர்த்தினி ஸ்தோத்ரத்தின் முதல் ஸ்லோகத்துக்கே முழுமையான பொருள் பலருக்குத்தெரியாது. காதுக்கு இனிய வார்த்தைகளுடன், மயக்கும் இசையுடன், நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ள ஸ்தோத்திரங்களில் அதற்கு ஒரு முக்கிய இடம் உண்டு. அதன் பொருளை அறிந்து கொள்ளலாமா?


अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दिनुते
गिरिवरविन्ध्यशिरोऽधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते ।
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते ॥ १ ॥

Ayi Giri-Nandini Nandita-Medini Vishva-Vinodini Nandi-Nute
Giri-Vara-Vindhya-Shiro-[A]dhi-Nivaasini Vissnnu-Vilaasini Jissnnu-Nute |
Bhagavati He Shiti-Kannttha-Kuttumbini Bhuri-Kuttumbini Bhuri-Krte
Jaya Jaya He Mahissaasura-Mardini Ramya-Kapardini Shaila-Sute || 1 ||

அயி கி3ரி-நந்தி3னி நந்தி3த-மேதி3னி விஸ்வ-வினோதி3னி நந்தி3- நுதே
கி3ரி-வர-விந்த்4ய-ஷிரோ-(அ)தி4 நிவாசினி விஷ்ணு-விலாசினி ஜிஷ்ணு நுதே|
ப4க3வதி ஹே ஷிதிகண்ட2-குடு2ம்பி3னி பூ4ரி-குடு2ம்பி3னி  பூ4ரிக்ருதே
ஜெய ஜெய ஹே மஹிஷாசுர-மர்த்தினி ரம்ய-கபர்த்தி3னி ஷைலசுதே||


Meaning:

Salutations to the daughter of the mountain, who fills the world with joy, for whom, the whole world is a divine play and who is praised by Nandi,

Who dwells on the summit of the Vindhyas, which is the best of the mountains, who gives joy to Lord Vishnu as His sister and who is praised by Indra,

O Goddess, who is the consort of Neela kanta Shiva, who has abundance of relations in the world, (being the Cosmic mother), and who created such abundance,
Victory to you, the destroyer of the Demon Mahishasura, to you, who has beauticul locks of hair and who is the daughter of the mountain.


அயி- ஏ! விளிக்கும் சொல். கிரி-மலை. நந்தினி- மகள். நந்தித- மகிழ்விக்கின்ற மேதினி- உலகை ( மேதினி என்ற சொல் இதே பொருளில் தமிழிலும் உபயோகப்பட்டுள்ளது. " மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்"- ஔவையார்) விஸ்வ- உலகை. வினோதினி-விளையாட்டாக நினைப்பவளே. நந்தி நுதே- நந்தியால் புகழப்படுபவள்.

கிரி வர- மலைகளில் சிறந்ததாகிய ( வர- என்றால் மிகச்சிறந்தது என்று பொருள். ஆகையால் தான் நாம் நம் பெண்குழந்தைகளுக்கு வரன் பார்க்கிறோம். வெறும் பையன்களைப்பார்ப்பதில்லை) விந்திய-விந்திய மலையின். சிரோ -தலைக்கு ( சிகரத்துக்கு) அதி- மேல் நிவாசினி -வசிப்பவள். விஷ்ணு விலாசினி- ஒரு சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவள். ஜிஷ்ணு- இந்திரனால் .நுதே-புகழப்படுபவள்.

பகவதி! - தெய்வத்தாயே! ஹே!- ஏ! ஷிதிகண்ட2 -நீல நிறக்கழுத்து உடைய ( சிவனின்). குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே. பூ4ரி- ஏராளமானவர்கள் நிறைந்த.  குடு2ம்பி3னி-குடும்பத்தைச்சேர்ந்தவளே ( உலக மாதா அல்லவா) பூ4ரி- ஏராளமானவற்றைப் படைத்தவளே!  ( பூ4ரி போ4ஜனம்- என்றால் நிறைய பக்ஷணங்களோடு நிறைய பேருக்குப்பரிமாறி அவர்களைத்திருப்திப்படுத்துவது என்று பொருள். )
ஜெய ஜெய - வெற்றி உண்டாகட்டும்! ஹே- ஏ!  மஹிஷாசுர- எருமைவடிவில் வந்த அரக்கனை மர்த்தினி-அழித்தவளே!  ரம்ய- அழகிய கபர்த்தி3னி- பின்னலிட்ட சடையுடைய ஷைல - மலையின் சுதே - மகளே!||

ஏ! மலையின் மகளே!  உலகை மகிழ்விக்கின்றவளே! உலகை விளையாட்டாக நினைப்பவளே!  நந்தியால் புகழப்படுபவளே!

மலைகளில் சிறந்ததாகிய விந்திய மலையின்சிகரத்தின் மேல் வசிப்பவளே!. சகோதரியாக விஷ்ணுவை மகிழ்விப்பவளே! இந்திரனால் புகழப்படுபவளே!

தெய்வத்தாயே! நீல நிறக்கழுத்து உடைய சிவனின் குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவர்கள் நிறைந்த குடும்பத்தைச்சேர்ந்தவளே! ஏராளமானவற்றைப் படைத்தவளே!

எருமைவடிவில் வந்த அரக்கனை அழித்தவளே! அழகிய  பின்னலிட்ட சடையையுடையவளே!  மலையின் மகளே!

உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

Monday, October 7, 2013

மன்னிப்பு கேட்க ஒரு ஸ்லோகம்


करचरण कृतं वाक्कायजं कर्मजं वा 
श्रवणनयनजं वा मानसं वापराधं 
विहितमविहितं वा सर्वमेतत्क्षमस्व 
जय जय करुणाब्धे श्रीमहादेव शम्भो 

Kara-Caranna Krtam Vaak-Kaaya-Jam Karma-Jam Vaa |
Shravana-Nayana-Jam Vaa Maanasam Va-Aparaadham |
Vihitam-Avihitam Vaa Sarvam-Etat-Kshamasva |
Jaya Jaya Karunna-Abdhe Shrii-Mahaadeva Shambho ||

கர சரண க்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா|
ஸ்ரவண நயனஜம் வா, மானஸம் வா அபராத(4)ம்|
விஹிதம் அவிஹிதம் வா, ஸர்வம் ஏதத் க்ஷமஸ்வ|
ஜய ஜய கருணாப்(3)தே(4) ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)||


ஸ்ரீ மஹாதேவ சம்புவிடம் நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்புக்கோரும் விதமாக அமைந்துள்ள இந்த ஸ்லோகம் படிக்கப்படிக்க நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. எப்படியெல்லாம் தவறுகள் இழைக்கக்கூடும் என்பதை ஒன்று விடாமல் குறிப்பிட்டுள்ளது.

கர-கைகள்
சரண - கால்கள்/ பாதங்கள்
க்ருதம் -செய்தவை
வாக் - சொற்கள் ( அதனால் தான் கலைமகளுக்கு வாகீஸ்வரி என்ற பெயர். திரு நாவுக்கரசரின் பெயர் கூட வாகீசர் என்பது தான்- நாவுக்கரசர் என்பது வாகீசர் என்ற சொல்லின் தமிழாக்கம் தான்)
காயஜம் - உடலின் மூலமாகப்பிறந்தவை
கர்மஜம் - செய்கைகளின் மூலமாக செய்யப்பட்டவை
வா- அல்லது
ஸ்ரவண - காதுகளால் கேட்டதால் ஏற்பட்டவை
நயனஜம் - கண்களால் பார்த்ததால் உண்டானவை
வா -அல்லது
மானஸம் -மனத்தில் உதித்தவை
அபராத(4)ம் -  குற்றம்
விஹிதம்  - செய்யப்பட்டவை
அவிஹிதம்  - செய்யப்படாதவை
ஏதத் -இவை
ஸர்வம் - அனைத்தையும்
க்ஷமஸ்வ- மன்னித்தருள்வாய்
ஜய ஜய - வெற்றி உண்டாகட்டும்
கருணாப்(3)தே(4) - கருணைக்கடலே! ( 'அப்தி' என்றால் கடல். கருணாப்தி- கருணைக்கடல்.
கருணாப்(3)தே(4) என்பது விளிவேற்றுமை. இறைவனைக் கூவி அழைத்து இப்படி மன்னிப்பு கேட்பதாக
அமைக்கப்பட்டுள்ளது)

ஸ்ரீ மஹாதே(3)வ ஷம்போ(4)- ஸ்ரீ மஹாதேவ சம்புவே!||


கருணைக்கடலான மஹாதேவ சம்புவே! என்னுடைய குற்றங்கள் கைகளினால் செய்யப்பட்டவையோ,
கால்களினால் செய்யப்பட்டவையோ, சொற்களாலோ, உடலின் மூலமாகவோ, செய்கைகளின்
மூலமாகவோ செய்யப்பட்டவையோ, அல்லது காதுகளால் கேட்டதாலோ,  கண்களால் பார்த்ததாலோ
அல்லது மனத்தில் நினைத்ததாலோ செய்யப்பட்டவையோ, செய்யப்பட்டவையோ அல்லது செய்யப்படாதவையோ, எப்படி இருந்தாலும், இவை அனைத்தையும் மன்னித்தருள்வாய்! உனக்கு வெற்றி உண்டாகட்டும்!

'All comprehensive' என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல், எதையும் விட்டு விடாமல், செய்த குற்றத்துக்கு மட்டும் அல்லாது செய்யாத குற்றத்துக்குக்கூட மன்னிப்பு கேட்கும் இந்த ஸ்லோகம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று!








Meaning:
1: Whatever Sins have been Committed by Actions Performed by my Hands and Feet, Produced by my Speech and Body, Or my Works,
2: Produced by my Ears and Eyes, Or Sins Committed by my Mind (i.e. Thoughts),
3: While Performing Actions which are Prescribed (i.e. duties prescribed by tradition or allotted duties in one's station of life), As Well as All other Actions which are Not explicitly Prescribed (i.e. actions done by self-judgement, by mere habit, without much thinking, unknowingly etc); Please Forgive Them All,

4: Victory, Victory to You, O Sri Mahadeva Shambho, I Surrender to You, You are an Ocean of Compassion.

Tuesday, October 1, 2013

'கராரவிந்தேன பதாரவிந்தம்'


करारविन्देन पदारविन्दं
मुखारविन्दे विनिवेशयन्तम् ।
वटस्य पत्रस्य पुटे शयानं
बालं मुकुन्दं मनसा स्मारामि ॥१॥


அரவிந்தம்- தாமரை.

करारविन्देन - கையாகிய தாமரையால்
पदारविन्दं- பாதமாகிய தாமரையை
मुखारविन्दे- வாயாகிய தாமரையில்
विनिवेशयन्तम्- வைத்துக்கொண்டிருப்பவனை ।
वटस्य पत्रस्य पुटे शयानं-ஆல் இலையின் மேல் சயனித்திருப்பவனை
बालं मुकुन्दं  - குழந்தை முகுந்தனை
मनसा स्मारामि- மனதால் ஸ்மரிக்கிறேன். Kara-Aravindena

( இந்த ஸ்லோகத்திலும் இரண்டாம் வேற்றுமை உருபான 'ஐ' உபயோகிக்கப்பட்டுள்ளது)

உலகமெல்லாம் பிரளயத்தில் அழிந்த பின்னர் ஒரு சிறு குழந்தையாய், குஞ்சுக்கையால், குஞ்சுக்காலைப்பிடித்து, குஞ்சு வாயில் வைத்தவாறே ஆல் இலை மேல் படுத்துக்கொண்டு இருக்கும் குழந்தை முகுந்தனை வழிபடுவதாக அமைந்துள்ளது இந்த ஸ்லோகம்.

'பால முகுந்தாஷ்டகம்' என்ற எட்டு ஸ்லோகங்களில் முதலாவதாகிய இந்த ஸ்லோகம் மிகவும் ப்ரபலம்.

இறைவனின் கைகளையும், கால்களையும், கண்களையும் தாமரையாக பாவிப்பது எல்லா காலங்களிலும் எல்லா மொழிகளிலும் இருந்திருக்கிறது.

துளஸிதாஸரின் 'श्री राम चन्द्र क्रुपालु' என்ற அழகான பாடலிலும் இதே போன்ற வர்ணனை வருகிறது.

'नव कंज लोचन  कंज मुख कर  कंज पद कंजारुणम |'  என்ற வரிகளில் ஸ்ரீ ராமனின் அழகு வர்ணிக்கப்பட்டிருக்கிறது.

कंज என்றால் தாமரை.

नव- புதிய कंज- தாமரை लोचन-கண்கள்
कंज தாமரை मुख- முகம்
कर- கைகள்  कंज தாமரை
पद- பாதங்கள் कंजारुणम- சிவந்த தாமரை

( அருணம் என்றால் சிவப்பு. சூரியனின் தேரோட்டிக்கு அருணன் என்று பெயர். ஏனென்றால் சூரியன் வருவதற்கு முன்பே வானம் சிவந்து விடும். தேரோட்டி தேருக்கு முன்னால் தானே அமர்ந்திருப்பான்.)


புதிய தாமரை போன்ற கண்களும், தாமரை போன்ற முகமும், தாமரை போன்ற கைகளும், சிவந்த தாமரை போன்ற பாதங்களும் பெற்று விளங்குபவன் ஸ்ரீராமன் என்று துளஸி தாஸர் உருகுகிறார். தொடர்ந்து வரும் வரிகளில் உள்ள வர்ணனை இன்னும் கூட அழகு.

No comments:

Post a Comment